சனி, ஜனவரி 30, 2016

அஷ்டாவக்ர கீதை.

அஷ்டாவக்ர கீதை. ------- இது ஜனக மன்னருக்கும், அஷ்டாவக்ர முனிவருக்குமிடையில் நடந்த சம்பாஷணையில் வெளிப்பட்ட தத்துவக் கருத்துக்கள் ஆகும் .
முன்னொரு காலத்தில் ஜனக மன்னர் தனது அரசவையில் தனது ஆஸ்தான பண்டிதருடன் அப்பியாசத்தில் ஈடு பட்டிருந்தார். அப்போது ஒரு புராதன வேதாந்த சாஸ்திரத்தில்-
“குதிரையேறும் ஒருவன் சேணத்தின் ஒரு சுவட்டில் காலூன்றி, மற்றொன்றில் கால் எடுத்து வைக்கும் நேரத்திற்குள் ப்ரும்ம ஞானம் உறலாம்” -
எனும் மஹா வாக்யம் இருந்தது. இமைப்பொழுதில் ஞானம் அடையலாம் என்பதே அதன் தாத்பர்யமாக இருந்தது. ஜனக ராஜாவால் அந்த வசனத்தைக் கடக்க முடியவில்லை.
பண்டிதரிடம் " குதிரை கொண்டு வரச் சொல்லட்டுமா?” என்று நேரடியாக அந்த வசனத்தின் நிரூபணத்தை அறிய ஆவல் கொண்டு வினவினார் மன்னர். அவருடைய ஆர்வத்தைக் கண்டு வெருண்ட பண்டிதரோ, அந்த ஞானானுபவத்தை நிரூபிப்பது தன்னால் முடியாதது என்று மறுத்தார்.
“ அப்படியென்றால் அந்த வசனம் பொய்யானதாக இருக்கவேண்டும். அல்லது மிகைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்” என்று வாதிட்டார் மன்னர்.
“ என்னால் நிரூபிக்க இயலாத பெரும் ஞானமென்பதால், பெரியோரின் வாக்கு பொய்யானதாக எப்படி இருக்க முடியும்?” என்று பதிலளித்தார் பண்டிதர்.
மன்னர் அந்த பதிலால் த்ருப்தியடையவில்லை. அந்தப் பண்டிதரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டதோடு நிற்காமல், நாட்டின் அத்தனை பண்டிதர்களையும் ஒவ்வொருத்தராகப் பரிசோதித்து, பதில் கிடைக்காது போகவே யாவரையும் சிறையில் இட்டார். நாட்டின் சான்றோர்கள் எல்லோரும் சிறைப்பட்டு, நாடே துயரத்தில் வீழ்ந்தது.
இந்தக் கட்டத்தில், வயதில் சிறியவரும் அறிவில் மூத்தவருமான ஒருவர் ,ஜனக ராஜனின் நாட்டில் காணப்பட்டார். தோற்றத்தில் எட்டுக் கோணலுடன் தென்பட்டதால் அவர் அஷ்டவக்ரர் என்று அழைக்கப்பட்டார். அந்த நேரத்தில் அரசனின் சந்தேகத்துக்கு நிரூபணம் அளிக்க முடியாமல் எல்லாப் பண்டிதர்களும் சிறைப் படுத்தப்பட்டிருப்பதை அறிந்தார்.
நேராக அரசனைச் சந்தித்து, சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எல்லோரையும் விடுவித்து, அவரின் சந்தேகத்தைத் தீர்த்துவைப்பதாகவும் அந்த மக்களிடம் சொல்லவே அவரை ஒரு பல்லக்கில் சுமந்து அரண்மனைக்கு ஜனக மன்னனைச் சந்திக்க அழைத்துப் போனார்கள்.
ஜனகருக்கும் அவரின் உறுதியைக் கண்டு அவரால் நிச்சயம் தன் ஐயத்தைத் தீர்த்துவைக்கமுடியும் என்று தோன்றவே, சிறைப்பட்ட எல்லோரையும் விடுவிக்க உத்தரவிட்டார்.
ஜனகருக்கு அதற்கு மேலும் பொறுமையில்லை. அடுத்த நொடியே அஷ்டாவக்ரரிடம், “குதிரையைக் கொண்டு வரச் சொல்லவா?” என்று ஆவலுடன் கேட்க, சிரித்தபடியே, “ அரசே! அவசரப்படவேண்டாம். நாம் இருவருக்கும் யாருமற்ற தனிமைதான் இப்போது தேவை. அங்கே உமக்கு அறிந்துகொள்ள வேண்டிய உண்மையை உரைப்பேன்” என்றார்.
ஒரு பல்லக்கில் அஷ்டாவக்ரரும், அரசன் குதிரையிலுமாக எல்லோரும் சூழக் காட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். வனத்தை அடைந்ததும் அரசரிடம், ”உடன் வந்த பரிவாரங்கள் அனைத்தையும் திரும்பிப் போகச் சொல்லுங்கள். நாம் இருவர் மட்டும் தனித்திருக்கலாம்” என்று வேண்டிக்கொண்டார்.
மன்னனும் எல்லோரையும் அனுப்பிவிட்டு, குதிரையின் சேணத்தில் ஒரு காலும், தரையில் மறுகாலுமாக தயாராக நின்றபடி, “இன்னும் தாமதிக்கவேண்டாம் முனிவரே! உண்மையை எனக்கு அருளத் தயை புரிய வேண்டும்” என்றார்.
அஷ்டாவக்ரர் அமைதியுடன், “அரசே! நீங்கள் அறிய விரும்பும் இந்த உண்மை, குருவினால் ஒரு சீடனுக்கு அருளப்பட வேண்டியது என்று கூறப்பட்டுள்ளது! நாம் இருவரும் அப்படி சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பது உண்மைதானா?” என்று கேட்டார்.
ஜனகரும் முனிவரை வணங்கி,” நானே உங்கள் சீடன். அருள் புரியுங்கள்” என்றார். மறுபடியும் முனிவர்,” ஜனகா! உண்மையான சீடன் என்பவன் தன்னையும், தன் உடமைகளையும் குருவுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமே?” என்று கேட்டார்.
ஜனகரும், “அப்படியே அர்ப்பணிக்கிறேன்” என்று தன்னையும், தன் உடமைகளையும் அர்ப்பணம் செய்தார். அஷ்டவக்ரரும், “அப்படியே இருப்பாயாக” என்று சொல்லி, அடுத்த கணம் மறைந்து போனார்.
ஜனகர்மரம் போல அசையாமல் அப்படியே நின்றார். சூரியன் மறையும் வரையும், மறைந்த பின்னும் அந்த இடத்திலேயே முனிவருக்கு அர்ப்பணித்தபடியே நின்றுகொண்டிருந்தார்.
நீண்டநேரத்துக்குப் பின்னும் அரசன் திரும்பவில்லையே என்ற கவலை கொண்ட அரசனின் பரிவாரங்கள் அவரைத் தேட ஆரம்பித்தார்கள். காட்டுக்குள் மரம் போல நிற்கும் அரசரைக் கண்டு திடுக்கிட்டார்கள்.
மன்னரோ தன்னைச் சுற்றியிருந்தவர்களையோ, அவர்களின் கேள்விகளையோ கவனித்தவராய் இல்லாமல் அப்படியே உறைந்திருக்க, மக்கள் வேதனையுடன் அஷ்டாவக்ரரைத் தேடினார்கள். அவரையும் காணாது போகவே, பெருத்த கோபமும், ஏமாற்றமும் சூழ அந்தக் கோலத்திலேயே மன்னனைப் பல்லக்கில் ஏற்றி, அரண்மனைக்குத் தூக்கி வந்து பள்ளியணையில் படுக்க வைத்தார்கள்.
மறுநாள் விடியலும் ஏமாற்றம் அளித்தது. மன்னனிடம் ஒரு மாறுதலும் தென்படாதது கண்டு, அஷ்டாவக்ரர் ஒரு மாயாவியாய் இருக்கக்கூடும் என்றும், அவரைத் தேடிக் கண்டுபிடித்து சிறையில் அடைக்கவேண்டும் என்றும் மந்திரிமார்கள் முடிவுசெய்து, அவரைத் தேடிக் கண்டுபிடிக்க நாட்டின் எல்லாப் பாகங்களுக்கும் தூதர்களை அனுப்பினார்கள்.
அன்றைய நாள் முடிந்து, இரவு பிறந்த வேளையில் அஷ்டாவக்ரர் தென்பட்டார். அவரைத் தூதர்கள் அரசவைக்குக் கூட்டிவந்தார்கள்.
முதன்மந்திரிக்கு அவரைக் கண்டதும், கட்டுக்கடங்காத கோபம் வந்தாலும், காரியம் கெட்டுவிடக் கூடாது என்று தன் கோபத்தை அடக்கிக்கொண்டு நடந்ததை எல்லாம் விபரமாக அஷ்டாவக்ரரிடம் எடுத்துச் சொல்லி, “மன்னரை மறுபடியும் சுயநினைவுள்ளவராக ஆக்கவேண்டும். அரசரின் இந்த நிலைக்குத் தாங்கள்தான் காரணம். கண்டிப்பாகக் காட்டில் என்ன நடந்தது என்று எங்களுக்குச் சொல்ல வேண்டும். ” என்று கேட்டார்.
அஷ்டாவக்ரர் “ஜனகா” என்று கூப்பிடவும், “ஸ்வாமி! வரவேண்டும்” என்று வணங்கினார் மன்னர்.
அமைச்சர்களுக்கு பலத்த ஆச்சர்யம்.
“ஜனகா! நான் உன்னைப் பரிதாபமான நிலமைக்குக் கொண்டுவந்து விட்டதாகவும், நான்தான் உன்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டுமென்றும் சொல்கிறார்களே? இது உண்மைதானா? நீயே சொல்!” என்றார்.
“யார் அப்படி அபாண்டமாகச் சொன்னது? சொல்லுங்கள்” என்று வெகுண்டார் மன்னர்.
அரசனின் கோபத்தைக் கண்டு அரசவையே நடுங்கிற்று. அஷ்டாவக்ரரிடம், அரசரை எப்படியாவது சகஜ நிலைக்கு மீட்டுத் தாருங்கள் என்று விண்ணப்பித்தார்கள்.
“அப்படியானால் நீங்கள் அனைவரும் வெளியேறுங்கள். மன்னனுடன் நான் தனியாக இருக்கவேண்டும்” என்றார் அஷ்டாவக்ரர்.
எல்லோரும் சென்றபின் அஷ்டாவக்ரர் , “ஜனகா! நீ எப்படி இருக்கிறாய்? என்ன நடந்தது? வழக்கம் போல இல்லையே நீ?” என்று கேட்டார்.
“முனிவரே! நான் என்னையே உங்களுக்கு அர்ப்பணித்துவிட்டேன். உங்கள் ஆணைப்படி இனி நடப்பேன்” என்று சொல்ல அஷ்டாவக்ரரும், “ ப்ரும்ம ஞானம் என்பது நன்கு பக்குவம் பெற்றவர்களுக்கே உபதேசிக்க உகந்தது. இதுவரை நான் உன்னை சோதித்தேன். இரவு உணவுக்குப் பின் நாம் சந்திக்கலாம்” என்று சொல்லி, தனது கிரமங்களை முடித்துத் திரும்பினார்.
ஜனகரின் அந்த இரவு அதற்கு முந்தைய இரவுகளைக் காட்டிலும் அர்த்தம் பொதிந்திருந்தது.
“ ப்ரும்ம நிலை, அதை அடையும் வழி யாது?” என்ற ஜனகரின் கேள்விக்கு, “ப்ரும்மம் என்பது நீயே அன்றி வேறில்லை. அதை உணர தேசம், காலம் எதுவும் இல்லை. அது எதுவோ அதுவே நீ. அதுவே எல்லையில்லா பரிபூர்ண ஆத்மா” என்று உபதேசித்தார்.
அன்றிரவு முழுவதும் அவ்விருவருக்கும் நடுவே இடம்பெற்ற உரையாடல்களே அஷ்டாவக்ர கீதையாய்ப் பரிணமித்தது.
மறுநாள் மன்னர் இயல்பாய்த் தன் அரசவைக்கு வந்து, தன் அலுவல்களில் ஈடுபட்டதைக் கண்டு அனைவரும் மகிழ்வுற்றனர்.
அஷ்டாவக்ரரும், “கண நேரத்தில் ஞானம் உறுவது குறித்த உன் சந்தேகம் தெளிவு பெற்றதா? உன் அனுபவத்தைக் கற்றறிந்த இந்த சபையோருக்குச் சொல்” என்று வேண்டினார்.
ஜனகரும், “ என் முதிர்ச்சியின்மையினாலேயே சாஸ்த்ர வாக்யத்தைத் தவறாய்ப் புரிந்துகொண்டேன். உங்களால் நான் தெளிவுபெற்றேன். அந்த வாக்யத்தின் ஒவ்வொரு எழுத்தும் உண்மையே” என்று ஒப்புக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக