சனி, ஆகஸ்ட் 27, 2016

வரலாறு பற்றிய உணர்வை எப்படி மாணவர்களுக்கு கொண்டு வருவது?

வரலாறு பற்றிய உணர்வை எப்படி மாணவர்களுக்கு கொண்டு வருவது?
ஒரு நான்காம் வகுப்பு மாணவனை எடுத்துக் கொள்வோம். அவனு(ரு)க்கு எப்படி வரலாறு பற்றிய உணர்வைக் கொண்டு வருவது.
அதற்கு முன்னால் ”நேரம்” பற்றிய மனநிலையை எப்படி ஒருவருக்கு உருவாக்குகிறோம் என்பதை யோசிக்கலாம்.
-முதலில் ஒரு குழந்தை பகல் இரவு என்பதை அறிந்து கொள்கிறது. இதை யாரும் அதற்கு சொல்லித் தரத் தேவையில்லை. இவ்வறிவை அதுவாகவே உணர்ந்து கொள்கிறது.
-அடுத்து பகலில் வெவ்வேறு பொழுதகளை முதலில் அறிகிறது. காலை மதியம் மாலை. இதுவும் சூரியனின் சுழற்சியை (பூமியின் சுழற்சியை) வைத்து நிழலை வைத்து குழந்தை தெரிந்து கொள்கிறது.
-இரவை இரண்டே இரண்டு பகுதியாக பிரிக்கிறது. இரவில் தூங்குவதற்கு முந்தைய காலம். தூங்கும் காலம்.
-ஆக ஒரு மனிதன் பிறந்து சில வருடங்கள் வரை, கடிகாரம் வந்த பிறகு கூட, கடிகாரத்தை எடுத்து காலம் பற்றிய அறிவை பெறுவதில்லை. கடிகாரம் இல்லாமலேயே அதை பெரிதாக முதலில் வகுத்துக் கொள்கிறான்.
இதே முறையைத்தான் வரலாறு பற்றி மாணவர்களுக்கு அல்லது நம் வீட்டு பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும் உபயோகப்படுத்த வேண்டும் என்பது என் கருத்து.
-எப்படி ஒரு குழந்தை இரவு பகலை பெரும் பிரிவாக பிரிக்கிறதோ அது போல வரலாறை பெரும் பிரிவாக பிரிக்க முதலில் கற்றுத் தரவேண்டும். அதை எப்படி செய்யலாம்.
- வீட்டுச் சுவரில் பெரிய சார்டை ஒட்டி வையுங்கள். அதில் நீளமான கோட்டை வரையுங்கள். (சார்ட்டின் மேல் பகுதியில்)
- கோட்டின் வலது அற்றத்தில் ஒரு புள்ளியை வைத்து இன்றைய தேதி வருடத்தை எழுதுங்கள் “இப்ப நாம எங்க இருக்கோம். இப்ப நாம 2016 யில இருக்கோம். 2016 ன்னா
என்ன? 1,2,3,.4 ... அப்படி எண்ணி எண்ணி 100 வரைக்கும், அது மாதிரி 100,200,300, அப்படி எண்ணி 1000 வரைக்கும். அத 1000, 2000 ம்ன்னு எண்ணினா 2000 வருசம். அதுகூட 16 எண்ணக் கூட்டினா அதுதான் நாம இப்ப இருக்கிற வருசம்” என்று சொல்லலாம்.
-கோட்டின் இடது மூலை அற்றத்தில் ஒரு புள்ளியை வைத்து. “ஒது என்னது. இத ஒண்ணாவது வருசம்னு சொல்லுவோம். இத ஞாபகம் வைக்க ஜீஸஸ் பிறந்த நாள வெச்சுக்குவோம். ஒண்ணாவது வருசத்துல ஜூஸஸ் பிறந்தாருன்னு வெச்சுக்க்க” என்று சொல்லி “ஜீஸஸ் பிறந்தார்” என்று குறிக்க வேண்டும்.
-இப்போது குழந்தைக்கு காலத்தில் முதல்கட்ட ஆரம்பமும் அதன் தொடர்ச்சியான இன்றைய தேதி பற்றியும் ஒரு அடிப்படை அறிவு வருகிறது. 1 டூ 2016 பற்றி அதற்கு தெரிகிறது.
-இப்போது நடுவில் ஒரு கோடு போடுங்கள். சரியாக நடுவில். அதில் 1000 மாவது வருசம் என்று மார்க் செய்து. அதில் ”ராஜ ராஜ சோழன் பிறப்பு” என்று எழுதுங்கள். இப்போது சொல்லுங்கள் “சரி முதல் வருசம் இயேசு பிறக்கிறாரு, அடுத்து நடுவுல ஆயிரமாவது வருசம் ராஜராஜ சோழன் பிறக்கிறாரு. அதற்கடுத்த ஆயிரமாவது வருசம் நாம பிறந்து இட்லி சாப்பிட்டுட்டு இருக்கிறோம் அப்படித்தானே” என்று கேட்க வேண்டும்.
-எப்படி இரவு பகலை முதலில் பிரிக்கிறோமோ அதுமாதிரி இந்த வரலாறு ஸ்கேலான
1- இயேசு
1000- ராஜ ராஜ சோழன்
2016 - நாம் அல்லது நீ
என்ற ”வரலாறு ஸ்கேலை” குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். இந்த முதல் ஸ்கேலைப் புரிய வைத்தால் வரலாறை விஞ்ஞானப்பூர்வமாய் உணர்வதற்கான அடிப்படையை உங்கள் குழந்தைக்கு ஏற்படுத்தித் தருகிறீர்கள் என்று அர்த்தம்.
-மறுபடி 1- 1000 என்னும் புள்ளிகளுக்கு நடுவே 500 வது இடத்தில் ஒரு மார்க் பண்ணுங்கள். 500 யில் குப்தர்கள் காலம்/ அழிவு என்று எழுதுங்கள். 1000- 2016 வருடம் நடுவே மார்க் பண்ணி 1500 வருடம் - ஐரோப்பியர்கள் மொத்தமாய் உள்ளே நுழைய ஆரம்பித்த வருடம் என்று எழுதுங்கள்.
-இப்போது வரலாறு ஸ்கேல் இன்னும் விரிவடைகிறது.
1- இயேசு
500 - குப்தர்களின் காலம்
1000- ராஜ ராஜ சோழன்
1500 -ஐரோப்பியர்கள் வருகை.
2016 - நாம் அல்லது நீ
- இப்படி வரலாறு ஸ்கேலை விரிக்க வேண்டும். முதலில் விரிவாக விரிக்கும் போது சம்பவம் அதே வருடத்தில் நடக்கத் தேவையில்லை. பக்கத்தில் இருந்தால் போதும். பெரிய சம்பவமாக நன்றாக மனதில் நிற்கும் சம்பவமாக சுவாரஸ்யமான சம்பவமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
-இப்போது ஒன்றிலிருந்து 500 வரைக்கும் தனியே ஒரு கோட்டை வரையுங்கள். அப்படிப் போங்கள்.
1-500 ஒரு நீண்ட கோடு
500-1000 ஒரு நீண்ட கோடு
1000-1500 ஒரு நீண்ட கோடு
1500 -2016 ஒரு நீண்ட கோடு.
- ஒவ்வொரு 500 வருசத்தையும் ஐந்தாகப் பிரியுங்கள். பிரித்து மார்க் செய்துவிடுங்கள். அந்த அந்த நூறு வருடத்துக்கான வரலாறு சம்பவத்தை அவ்வப்போது ஜாலியாகப் பேசி அதில் எழுதி வையுங்கள். கிட்டத்தட்ட பக்கத்தில் இருந்தால் போதும்.
-எப்படி எண்கள் படிக்கும் போது 0,1,2,3... என்று முதலில் போவோமா அப்படி முதலில் கிபி 0,500,1000,2016 என்று போய்விட்டு, அதில் மாணவர்கள் தெளிந்த பிறகு எண்களில் -1,-2,-3 ... என்று போவதற்கு கற்றுக்கொடுப்பது போல கிமு பகுதியைக் கற்றுக் கொடுக்கலாம்.
-எடுத்த உடனே கிமு கிபி போகத் தேவையில்லை (என் கருத்து) கிபியை முடித்து வரலாறு ஸ்கேல் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்துவது முக்கியம்.
ஏன் இந்த வரலாறு ஸ்கேலை ஒரு மாணவன் எட்டு வயதில் படிக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்லுகிறேன் என்றால் பொதுவாக நமக்கு ஒரு பழமையின் மூலம் பற்றிய விழிப்பே இல்லை.
உதாரணமாக ”ஷிரிடி சாய்பாபா” என்று சொல்கிறோம். அவர் எவ்வளவு பழமையானவர் என்று ஒரு பொது ஜனத்தைக் கேட்டுப் பாருங்கள். “அவரு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாலே வாழ்ந்தவர்” என்ற மனபிம்பத்தைதான் கொண்டிருப்பார்கள். ஷிரிடி சாய்பாபா 1835 ஆண்டு பக்கத்தில் பிறந்தவர்.
ரமணர் பிறந்தது 1879 யில். அம்பேத்கர் பிறந்தது 1891 ஆம் ஆண்டில். ரமணருக்கும் அம்பேத்கருக்கும் வயது வித்தியாசம் 12 ஆண்டுகள்.
ஆனால் ஒரு பொது ஜனம் அம்பேத்கர் பற்றி என்ன பிம்பம் வைத்திருப்பார். ரமணர் பற்றி என்ன பிம்பம் வைத்திருப்பார் என்று ஒரு பொது ஜனமாகவே நின்று யோசித்துப் பாருங்கள். ரமணரை மிகப் பழமையானவர் என்றும் அம்பேத்கர் இப்போதைய காலத்தில் உள்ளவர் மாதிரியும் ஒரு எண்ணம் இருக்கும்.
வள்ளலார் எப்போது பிறந்தார் 1823 ஆண்டு பிறந்தார். நானெல்லாம் வள்ளலார் பல் நூறு வருடங்கள் முன்பு பிறந்தவர் என்றுதான் குழந்தையில் நினைத்திருக்கிறேன்.
இப்படி குழந்தையில் இருந்தே நமக்கு வரலாறு பற்றிய விழிப்பு, இறந்த காலம் பற்றிய விழிப்பு இல்லாமல் போகிறது,
இந்த விழிப்பு வரும்போதுதான் வரலாறு என்பது நமக்கு ஒரு அறிவியல் நிலையாக படியும். அப்படி படியும் போது நாம் பல மயக்கங்களில் இருந்து போலித்தனங்களில் இருந்து விடுதலையாவோம்.
உங்கள் வீட்டில் சார்ட் ஒட்டி விட்டீர்க்ளா?
வரலாறு ஸ்கேல் வரைந்து விட்டீர்களா ?  
பின்குறிப்பு : இதே விஷயத்தை அன்று பள்ளி மாணவர்களிடம் உரையாற்றும் போது சுருக்கமாக சொன்னேன்.
நன்றி: 
Vijay Bhaskarvijay

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக